Thursday 4 August 2016

அப்பாலரங்கர்..மனம் மட்டும் என்றும் அரங்கனிடத்திலே..

சமீப வருடங்களாக "இவரை" பார்க்காமல்..செல்வது என்பது மிகப்பெரிய குறை எனக்கு.

பார்த்துவிட்டு சென்றாலோ..மனம் அன்று ஆனந்தக்கூத்தாடினாலும்..அவர் அழகிலேயே பித்தாகி லயித்துப்போகும்.

"இவர்" மயக்கத்தில் இருப்போர் பலர்.

யாரிவர் ?!

மிக நெருக்கமாக , அழகாக சலசலத்து ஓடும் காவிரியின் கரையில் , நதியை ஆசீர்வதித்து பாதம் நீட்டி, ஆதிசேஷன் படுக்கையில் ..தலையில் குடையாக பிடிக்க, உலகங்களை சுருட்டி தலையணையாகக்கொண்டு சற்றே திரு முகத்தை நிமிர்த்தி வருபவரைக் கண்டு அவர்களுக்கு காட்சி தர.. யோக நித்திரையில் இருக்கும்..அப்பாலரங்கர் தான் "இவர்".

மிகச்சிறிய ஊர் தான் கோவிலடி.(திருப்பேர்)

கல்லணை- திருவையாறு மார்க்கத்தில்..திருச்சியிலிருந்து 30 வது கிலோமீட்டரில் உள்ளது.

பஞ்ச ரங்கம் என்பவை..மிக விசேஷம்.

பிரிந்து பாயும் இரு காவிரிக்கு மத்தியில் உள்ள  தலங்களாகும்.

ஆதி ரங்கம் - ஸ்ரீரங்கப்பட்டினம்(மைசூர்),
அப்பால ரங்கம் - திருப்பேர்நகர் (கோவிலடி),
மத்திய ரங்கம் –ஸ்ரீரங்கம் (திருச்சி),
சதுர்த்த ரங்கம் – திருக்குடந்தை சாரங்கபாணி ஸ்தலம் (கும்பகோணம்),
பஞ்ச ரங்கம்(ஐந்தாவது ரங்கம்) - திருஇந்தளூர் பரிமள ரங்கம் (மயிலாடுதுறை).
ஆகிய தலங்களை தரிசித்தால் 108 திருத்தலங்களை தரிசித்த பலன் உண்டு.

அமர்ந்த..நின்ற திருக்கோலத்தில் உள்ள அர்ச்சாவதார திருமால் மூர்த்திகளை விட தனி கவரும் அழகு யோக நித்தரையாக மாயனாகி நம்மை ஆட்கொள்ளும் இந்த பள்ளிக்கொண்ட பெருமாளிடம் உள்ளது.

வடபத்ர சாயி என்ற பள்ளிக்கொண்ட பெருமாளுக்கு சூடிக்கொடுத்த ஆண்டாள் மனதைப்பறிக்கொடுத்ததும்..மணந்ததும் திருவரங்கம் அரங்கனிடம் தானே..!

அரங்கனை தரிசித்திருந்தவள் தான்..ஒரு முறை..அவ்வழியே வரும்போது.. அம்மாவுடன்..ஊருக்குள் சென்று..கோவிலடி..அப்பாலரங்கரை தரிசிக்க ஆசைப்பட்டேன். அன்று ஆட்கொண்டான் அரங்கன்.

மறுமுறை.. கணவருக்குக் காண்பித்து..அவரும்..சேர்ந்து தரிசிக்க..கோவிலுக்கு சென்ற போது அற்புதமான விஷயங்கள் நிகழ்ந்தேறின.

அன்று என் மனதில்..கண்ணீரில் கரைந்திருந்த கவலைக்கு..பிரார்த்தனைக்கு.. அசரீரி போல அர்ச்சகர் மூலம்..சரியான பதில் கிடைத்தது. ஊனும் உருகி..நெக்குருகி.. நெகிழ்ந்து.. உணர்ந்து..மெய் சிலிர்த்துத் திரும்பினோம்.

அன்று முதல்..அனைத்திற்கும் மேல் அந்த அரங்கன் என்றாகி விட்டான்.

அத்தனை அழகா..ஒருவனிடத்தில்..! வைத்தக்கண் வாங்காமல்..மனம் அவனழகில் லயித்துப்போகும்.

ரெண்டே பிரகாரங்கள், 2.5 ஏக்கரில் சற்றே உயரத்தில் அமைந்தத்திருக்கோவில்..திருப்பேர் என்று முன்னர் அழைக்கப்பட்டு இன்று கோவிலடி என அழைக்கப்படுகிறது.

பஸ் செல்லும் வழியில்..இக்கோயில் இருப்பதற்கு அடையாளமாக ஒரு போர்ட் மட்டுமே பார்க்கலாம். இறங்கி..உள்ளேப்போனால்..ஒரு வழி காவேரிக்கும்..மற்றொன்று கோவிலுக்கும் செல்லும். வெளியில் பூக்கடை..பழக்கடை என்ற எந்தவொரு திவ்ய தேசக்கோவிலுக்கும் உண்டான முகாந்திரம் இல்லாத இத்தலம்..நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பெரியாழ்வார் இந்த நான்கு ஆழ்வார்களால்..தமிழமுதம் தந்து பாடப்பட்டு..6 வது திவ்ய தேசம் என்றழைக்கப்படுகிறது. .
முதலில்..4 பெரியப்படிகள்..பின்னர் திருக்கோயிலின் வாயில்...சிறிய மண்டபம்..த் விஜஸ்தம்பம் மீண்டும் படிகள் (30 இருக்கலாம்) கடந்ததும்...கோவிலின் நுழைவாயில்..நேராக அரங்கனின் வாசம்.

இம்முறையும்..அவரைக்காணாமலா..என்றரித்துக்கொண்டிருந்தமனம்..இவ்வூரை நெருங்க நெருங்க.. சொல்ல முடியாத ஆனந்தமும், நெகிழ்வும்..படபடப்பும் என்னுள் சூழ ஆரம்பித்தது.

எப்போதுமே மிக அழகாக சேவை சாதித்து அருள்வார் இந்த அரங்கர்.

அன்றும் அப்படியே.. வாருங்கள் உள்ளே என்றழைத்தார் அர்ச்சகர். அவன் அழகைக்கண்டவர்கள்..கண் இமைக்க மறுப்பதும்...உடல் உருகி.. கண்களில் நீர் சுரக்க நிற்பதும் நிஜம்.

கற்பூர வெளிச்சத்தில் காணக்காண..ஒரு வேளை வைகுண்டத்தில் தான் நாம் நிற்கிறோமா..என்ற தோற்ற மயக்கத்தில்..ஆதி சேஷன் குடையாகப்பிடிக்க படுக்கையில்.. கால்கள் காவிரியை நோக்கி..ஆசீர்வதித்தவாறு இருக்க..காலடியில் பூமாதேவி அமர்ந்திருக்கிறார். எங்கு ரெங்கன்..பள்ளிக்கொண்டிருந்தாலும்..பூமா தேவி மோட்சம் வேண்டி அங்கு வந்து வேண்டி இருக்கிறாளாம்.

ஒருபக்கம் மார்க்கண்டேய மகரிஷி..
ஒருகை..யோக முத்திரையுடன்..மறு கை அருகில் பெரிதாக உள்ள அப்பக்குடத்தை தொட்டவாறு உள்ளது.

அதனாலேயே அப்பக்குடத்தான் என்றப்பெயரும் இப்பெருமாளுக்கு.

சுவையான வரலாறு இல்லாமலா இப்பெயர்.

ஸ்ரீ நகர்..திருப்பேர் ஆதிக்கால ஊரின் பெயர்.

பெருமாள் இங்கு வருவதற்கு முன்பே திருமகள் வந்தமர்ந்த ஊர் இவ்வூர்.

ஒரு முறை வைகுண்டத்தில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் வீற்றிருக்கையில், யார் சிறந்தவர் ஸ்ரீதேவியா..? பூமா தேவியா என்ற பட்டிமன்றம் எழுந்த போது பூதேவியே என்று தீர்ப்பானதில்..வெகுண்ட ஸ்ரீதேவி பெருமாளைவிட்டுப்பிரிந்து வந்து தவம் இயற்றிய தலம் புரச மரங்கள் அடர்ந்த வனமாக இருந்த இந்த கோவிலடி அதனாலே திருப்பேர் நகர் என்ற பெயர் பெற்றது. அங்கு பெருமாளும் தேவியின் தவத்தால், ஆட்கொண்டார்.

உபரிசிரவசு என்ற பாண்டிய அரசன் கௌதம முனிவரது ஆசிரமத்தில் அட்டகாசம் செய்த யானையைக் கொல்லும் சமயம் , அந்த யானை மதத்தால் ஒரு யோகியை கொன்றுவிட , பிரம்மஹத்தி தோஷம் பிடிக்கப்பட்ட அரசன், அந்தப்பாவத்தை உணர்ந்து பிராயசித்தம் தேட..இந்த புரசக்காட்டிற்கு வந்ததும் எதோ ஒரு அருள் சக்தி தன்னை ஆட்கொள்வதை உணர ஆரம்பிக்கிறான். தன்னுடைய குரு நாதரது ஆசியுடன் அந்த புரச வனத்திலே தங்கி தினம் அங்கு வரும் ஆயிரம் அந்தணர்களுக்கு உணவு அளித்து வர தோஷம் நீங்கும் என செய்து வருகிறான்.

தினமும் அமுதுப்படைத்துவரும் வேளையில்..ஒரு ஏழை அந்தணர்க்கு (பெருமாளே சோதிக்க எண்ணி அந்தணர் வடிவில் ) உணவு படைக்கும் போது..அவர் அனைத்தையும் உண்டு இன்னமும் பசிக்கிறதே என்றுக்கேட்கிறார். அப்போது அரசன்..மீண்டும் உணவு தயாரிக்க சிறிது நேரம் ஆகும்..ஆகையால் அதுவரை..இந்த அப்பத்தை உண்டும்..இளைப்பாற வேண்டும் எனவும் கேட்டு க்கொள்கிறான். அதன்படியே அந்தணரும் படுத்தப்படி இருக்க...

எமபயத்தால்..இருந்த மார்க்கண்டேயருக்கு சிவபெருமான் தோன்றி, இந்நிகழ்ச்சி ப் பற்றிக்கூறி, அது பெருமாளே என்றும் அவரே பயத்தைப்போக்குபவர் என்றும் மார்க்கண்டேயரைப்போக பணிக்கிறார்.

வந்த மார்க்கண்டேயர் உறங்கும் கோலத்தில் உள்ள அந்தணரை 100 முறை வணங்கி எழுந்ததும் அவரை தனது நிஜ உருக்காண்பித்து ஆசீர்வதித்து..அவரது எம பயம் போக்கி ஆயூளை நீட்டித்தும், அப்பக்குடம் தந்த அரசனுக்கும் காட்சித் தந்து அவனது தோஷத்தையும் போக்கி..அப்பாலரங்கர் , அப்பக்குடத்தான் ஆகிறார்.

சுவையான அப்பம் தினமும் இரவு பகவானுக்கு நிவேதனம் செய்யப்படுகிறது.

தாயார் கமலவல்லி, இந்திரதேவி.

இந்திர விமானத்தில் உள்ள திருக்கோவிலுக்கு சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைப்பெற்று..புதுப்பொலிவுடன் உள்ளது.

நுழையும் போது வரவேற்ற அர்ச்சகர், 70 வருடங்களுக்குப்பிறகு ஸ்வாமிக்கு கல்யாண உத்ஸவம் நடைப்பெற உள்ளதாகவும் அதற்காக ஒருவர் பூத்தொடுத்துக்கொண்டிருக்கிறார் என்றும் கூறினார்.

பூ வாங்கிக்கொண்டு போகவில்லையே என்று தவித்த என் மனதிற்கு இது சற்று ஆறுதலாக இருந்தது.

பிரகாரம் சுற்றி வரும்போது  பூமாலைகளை தொடுப்பவரைக் காண நேரிட்டது.

திருச்சேரை என்ற ஊரின் சிவன் கோவிலில் பூத்தொடுக்கும் (பூக்கடை) பணியில் உள்ளவர் தனது பணத்தினால்..ஸ்ரீரங்கம் பூ மார்க்கெட்டில் பூ வாங்கி வந்து, பெரிய பெரிய மாலைகளைத் தொடுத்துக்கொண்டிருந்தார்.

" நா சிவன் கோவில்ல இருந்தாலும்..ஒரு தரம் வந்தேங்க..என்னவோ இந்தப்பெருமாள் மேல அப்படி ஒரு ஈர்ப்புங்க..இவருக்கு செய்யாமல் வேற யாருக்குங்க..அதான்..காலைலயே போய் வாங்கிட்டு வந்து..தொடுக்க ஆரம்பிச்சுட்டேன்..!

இந்த ரெங்கன் எனக்கு ரொம்பப்பிடிச்சுப்போச்சுங்க..ரொம்ப நிம்மதியா நல்லா வச்சிருக்கான் என்னை எந்தக்குறையுமில்லாமல்..அதான் கரெக்டா வந்துருவேன்" என்றவர் என் பெயர் பாலா..நா ப்ளட் டோனர் ங்க என்றதும்..அவரது புஷ்பக் கைங்கர்யத்தைப்பாராட்டி, மீண்டும் ஒருமுறை அரங்கன் திருமுக மண்டலம் கண்டு..தற்காலிகமாக அவனிடமிருந்து விடைப்பெற்றேன்.

திருச்சிக்கு மிக அருகில் எமபயம், கர்வம், அனைத்து பயங்கள், தோஷங்களைப்போக்கும் இந்த அப்பக்குடத்தானை இறுதியாகப் பாடிய நம்மாழ்வார் மோட்சம் சென்றதாகக்கூறப்படுவதால்..
இந்த அரங்கனை வழிபடுவோர்க்கு இனியொரு பிறவியில்லா மறுமையும் கிட்டும் என்கின்றனர் ஆன்றோர்கள்.

காவிரி தன்னைக்குறுக்கியப்படி ஓடினாலும் ஈர்க்கிறாள் கல்லணையில்..கொள்ளிடக்கரை மறுபுறம் என அமைதியான ஒரு ஆன்மீகப்பயணமாக அமைந்தது. என் பெண்ணின் பிறந்த நாளன்று அரங்கனை தரிசித்தது மிகப்பெரிய பலமாக இருந்தது...