Wednesday 9 March 2016

மடிசார் மருத்துவர்

கல்யாணி. அழகான ராகம் , அந்த ராகம் மனதுக்கு பிடித்ததைப்போலவே தன் மகளுக்கும் பெயராக்கி அழைத்து மகிழ்ந்தார் அந்தத் தந்தை. கல் ஆணி... Stone nail என்று கிண்டல் செய்யுமளவிற்கு

தஞ்சைமாவட்டத்தின் ஒரு கிராமத்தில் சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தப்பெண்ணால் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன் Form 3 – மூன்றாவது ஃபாரம் (தற்போதைய எட்டாம்வகுப்பு எனலாம்) வரை மட்டுமே படிக்க முடிந்தது.

பெண் குழந்தைகளுக்கு அப்பா தான் ஹீரோவாக இருப்பார் , சில அப்பாக்களுக்கு தன் பெண்ணே தாயுமாகி உயிருமாகியிருப்பாள் . அப்படியே ஒரு சொற்ப நிலம் கொண்ட   விவசாயி கூடுதலாக ஆயுர்வேத மருத்துவம் தெரிந்ததால் ஊராரால் டாக்டர் என அழைக்கப்பட்டவர் , தன் மகளையே வாரிசாக எண்ணி தனக்கு தெரிந்த சமையல் நுட்பங்கள், நான்கு பேருக்கு சமைக்கும்போது ஆறு பேர் வந்து விட்டால் செய்யவேண்டியது,எப்படி பரிமாறுவது ,, விவசாயத்தின் நுணுக்கங்கள் , எத்தனை கலம் விதைத்தால் எத்தனை அறுவடை செய்யலாம் , மருத்துவத்தின் நுணுக்கங்கள் எந்தெந்த வியாதிக்கு என்னென்ன மருந்துகள், அதை செய்யும் முறைகள் இப்படி அருகில் அமர்த்தி சொல்லித்தந்த போது அந்தக்குழந்தைக்கு வயது 6.

தனக்குக்கீழே இரண்டு தங்கைகள் , ஒரு தம்பி , ஏதுமறியாமல் ரெண்டாம் தாரமாக மணமுடிக்கப்பட்ட தாய் என்றிருந்தக்குடும்பச்சூழலில்..அறியாத பருவத்தில் தாய் மாமாவிற்கே திருமணம் . திருமணம் ஆனதுமே கற்றுத்தந்து ஆசானாக இருந்த தந்தையின் இழப்பு.

குடும்ப பாரம் சுமைக்கவே தனக்கான திருமணம் என்பதையும் அறியாத வயது அந்தப்பெண்ணிற்கு.

சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியக்கிராமம் , ஊர்கட்டுப்பாடும் , பெண்களின் மீதான கட்டுப்பாடுகளும் மிக அதிகமாகவே கோலோச்சியக்காலம்.

குடும்பத்தில் சொந்தங்கள் ஒரே ஊரில் இருந்தாலும் , தன் வீட்டு கஞ்சியோ கூழோ மட்டுமே குடித்து வளர வேண்டும் என்று தன்மானத்தையும் சுயமரியாதையையும் சேர்த்து போதித்தக்காலமும் அது. 

அழகாகப் பெண்களை படைக்கும் இறைவன் கூடவே அறிவையும் சேர்த்துப்படைத்து பெருமைக் கொள்வதுண்டு.

அழகும் திறமைகளும் ஒன்றாக போட்டிப்போட , கோலம் , சமையல் , விவசாயம்  , மருத்துவம் என சகலத்திலும் சிறந்து விளங்கியவர் புகுந்த வீடு வசதியானக் குடும்பம் ஆதலால்..ஏன் முறையாகப் படிப்பை தொடரக்கூடாதென்ற எண்ணமும் உதயமாக தனக்கென ஒரு பெண்குழந்தை பிறந்து அது பள்ளி செல்லும் காலத்தில் பார்ம் 3 லிருந்து பார்ம் 8 (அது அன்றைய உயர்படிப்பிற்குள் நுழையத் தேவையானதாக இருந்தது) எழுதி பாஸ் செய்தவருக்கு..எப்படியாவது மருத்துவராக பட்டம் பெற வேண்டுமென்ற ஆசை துளிர்விட்டது.

துளிராகும் ஆசையே , இலையாக காயாக கனியாக விதையாக விருட்சமாகி ஒரு தலைமுறையையே தீர்மானிக்கிறது.
துளிர்விட்ட ஆசை , சென்னை சென்று அலோபதி மருத்துவம் படிக்கக் குடும்பச்சூழல் தடைவிதிக்க (அப்போது Dr.முத்துலட்சுமி மட்டுமே முதல் அலோபதி படித்தவர்)

ஜெர்மானிய மருத்துவ முறையான ஹோமியோபதி நம் தமிழ் நாட்டில் பரவிட அதைப் படிக்கும் ஆவலில் கட்டுக்கடங்காமல் கொதித்திருந்தது.
முடியுமா, சாத்தியமா ?

50 வீடுகள் கொண்ட கட்டுக்கோப்பான அக்ரஹாரம், ஆச்சாரமான பிராமணக்குடும்பத்துப் பெண்மணி, ஒரு பெண்குழந்தைக்கு தாயானவள்,

அப்போது தான் சுதந்திரம் பெற்றிருந்த கன்னித்தாய் போன்ற நாடு இத்தனை தடைகளை தாண்டி படிக்கும் ஆசை நிறைவேறுமா? என்ற எண்ணத்திலிருந்தார் அந்தப்பெண்.

முயன்றால் முடியாதது ஏதும் இல்லை என்ற முனைப்புடன் வீட்டுப்பெரியோர்களிடம் விடைப்பெற்று தஞ்சையில் படிப்பிற்கான வகுப்புக்கள் செல்ல ஆரம்பித்தார். மடிசார் புடவையுடன் கல்விக் கற்க செல்வதா? கிண்டலும் கேலியும் கைக்கொட்டிச்சிரிக்குமே கோரஸ் குரலில்.

9 கஜம் புடவையை கல்லூரியில் 6 கஜம் புடவையாக மாற்றிக்கொண்டு வகுப்புகள் முடிந்ததும் மீண்டும் 9 கஜத்திற்கு மாறி தனியே பேருந்தில் பயணித்து அக்ரஹாரம் பிரவேசம் செய்வது அன்றைய சவாலாக இருந்தது அவருக்கு.

மிக வெற்றிகரமாக முதல் தஞ்சை மாவட்டத்தின்  ஹோமியோபதி மருத்துவர் என்றப் பெருமையுடன்  அங்கீகரிக்கப்பட்ட பட்டத்துடன் வீடு வந்தவரை குடும்பமோ சமுதாயமோ பெரிதாக வரவேற்கவில்லை.
அசராமல் ஸ்ரீரகுபதி க்ளினிக் என்ற பெயரில் வீட்டின் முன்பகுதியில் மருத்துவமனை தொடங்கி மருத்துவம் பார்க்க தொடங்கியவர் , சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கும் அவசரத்திற்கு ஓடி வைத்தியம் பார்த்தார்.

நல்ல குரல்வளம் கொண்டவருக்கு M.K.தியாகராஜ பாகவதர் , எம் எஸ் சுப்புலஷ்மி பாடல்கள் தலைகீழ் பாடம். முறையான கர்நாடக இசை கற்றவர் , கூ(ட்)டத்தில் இவர் பாடிட மற்றவர் வாய் மூடி மௌனிப்பர்.

விதியின் விளையாட்டிற்கு மானிட உயிர்கள் பகடைக்காய் ஆவதுப்போல இவர் வாழ்விலும் இளவயதில் கணவரதுப் பிரிவு , போராட்ட களமான வாழ்க்கை, விவசாய நிலங்களை பாதுகாக்க வேண்டிய நிலை சீரியஸான மருத்துவ தொழிலுக்கு சற்று ஓய்வு தர செய்தன.

விவசாயத்தை 1972 ல் கையில் பிடித்தவர் தொடர்ந்து 40 வருடங்கள் பல சவால்கள் , சாதனைகளை சந்தித்து , பல ஆண் மிராஸ்தார்களும் சொத்தை விற்று முடியாதென்று விலக இவர் சாதித்து நின்றவர்.

துணிச்சல் பெரும் சொத்து , இல்லையெனில் ஓட ஓட விரட்டிடும் சமூகம் என்பது இவரது பேச்சில் தெரியும்.இருட்டில் திருடர்களை விரட்டிப்பிடிக்கும் அசாத்திய துணிச்சலும் ,

நிலத்தை குத்தகைக்காரர்களிடமிருந்து மீட்க வழக்குப் போட்டு அதற்கான பகையையும் ஒருவராக நின்று சமாளித்து என கிராமத்து ஜான்ஸி ராணியாகவே வாழ்ந்திருந்தார் அந்த ஊர் மக்களின் முன் .

ஊரில் உள்ள பெண் குழந்தைகளுக்கும் அதை ஊட்டி தனக்குத் தெரிந்தக் கலைகளையும் சேர்த்துத்தந்தார்.
அழகு , அறிவு துணிச்சல் அனைத்துமான கலவையாக இருந்தவர் தனது இறுதிக்காலத்தையும் கணக்கிட்டு திருப்பாவை பாடியப் படியே உயிர்துறந்ததும் இதே மார்கழியில்.

இத்தனைப் பெருமைக்குரிய மடிசார் உடுத்திய கல்யாணி என்ற என் பாட்டியின் பெருமையை நான்  உணர்ந்தது எனது எட்டாவது வயதில்.

அன்று பாட்டியுடன் வயலுக்கு சென்றவள் சற்றுக்கூடுதல் நேரம் பம்பு செட் தண்ணீரில் குளித்து ஆட்டம் போட ஆசைப்பட்டு,” நான் தனியாக வந்துவிடுவேன், நீங்க , வீட்டுக்குப்போங்க”  என்று சவாலாக பேசியவள்,

குளித்து முடித்து திரும்பி வரும்போது, தலை முட்டும் நெற்பயிர்கள் சூழ உள்ள வயல்கள்  , சுழித்து ஓடும் வாய்க்கால்கள் என பார்த்தப்படியே வழி மறந்துப்போய், சேற்றில் விழுந்து எழந்து , கரையேறியது சென்றது அதே ஊரிலிருந்த வேறு பகுதிக்கு.

அங்கிருந்தவர்களிடம் தான் இன்னார் பேத்தி எனவும்  ,அவர் வீட்டுப் பெண்ணா பாப்பா நீங்க என்று ஒரு கும்பலே அழைத்து வந்து பாட்டியிடம் நான் அழுது என் மானம் போனக் கதையைக் கூறி நகைத்து விட்டுச் சென்றது.

அந்த வயதில் விதைத்த விதை என்னுள்ளும் விருட்சமாகி இந்த எழுத்துக்களில் பெருமையுடன் கனிந்திருக்கிறது.

தடைகளும் உடைப்பதற்கே! தடங்கல்களும் தாண்டிசெல்வதற்கே !!

பெண் என்பவள் மாபெரும் சக்தியென உணரும்போது சாதிக்கிறாள்.

*நன்றி ..குங்குமம் தோழிக்கு !

குங்குமம் தோழியில் வெளியான எனது கட்டுரை

No comments:

Post a Comment