Friday 19 February 2016

உங்களுடன் சில நொடிகள் !

என் நட்பிலேயே சிலர் , திருமாலை..நான் எழுதுவது தெரியாமலும் , யார் இயற்றியது எனவும் தெரியாமல் இருப்பதுபோல இருக்கிறது.  

திருமாலைக்காண்போமா என்ற தலைப்பைப்பார்த்ததுமே ஒரு லைக் போட்டும் போடாமலும் நகர்ந்துவிடுவர் என புரிந்தது. அவர்களுக்காகவும் , (பேஸ்புக்கில் ) 
ஒரு சிறிய அறிமுகத்துடன் அடுத்தப் பாசுரம் எழுதலாம் என எண்ணினேன்.
அதென்ன திருமாலைக் காண்போமா! ,  

இதானே !

அந்த காலத்தில் நம் பண்பாட்டையும் , அப்போதைய நிகழ்வுகளை யும் கோவில்களில் சிற்பமாக செதுக்கி வைத்தனர். பக்தியை சார்ந்த இலக்கியங்களும் எழுதப்பட்டன.

சிவனை வணங்குபவர்கள் எழுதியவை சைவக் கோட்பாடுகளை வெளிப்படுத்தியும் , திருமால் , மஹா விஷ்ணுவை வழிபட்டவர்கள் வைணவ இலக்கியங்களையும் தமிழில் தந்தனர்.






இதில் , நான் சமீபத்தில் ஒரு ஸ்கைப் வகுப்பின் மூலமாக நாலாயிர திவ்யப் பிரபந்தங்கள் கற்க ஆசைப்பட்டேன். அதற்காக என்னையும் அவர்களுடன் இணைத்துக்கொண்டேன். அதில் அப்போது , அவர்கள் எடுத்துக்கொண்டது , திருமாலை.

அதற்கான பாசுரங்களை மட்டும் சொல்லி வந்த நான் அதன் அர்த்தமும் தெரிந்துக்கொண்டால் பலாச்சுளையை தேனில் அமிழ்த்தி உண்ணும் சுவைக் கிடைக்குமே எண்றெண்ணினேன். அப்படியே அதற்கான தேடலில் இறங்கி..அதை இங்கும் பகிர ஆரம்பித்தேன்.


அடுத்தடுத்து எழுத முடியாமல் சிறிது இடைவெளி விட்டே எழுதி வந்தேன்.
சரி இப்போ என்ன வந்தது அதற்கு..அதானே..இதோ வந்து விட்டேன் !
திருமாலையைப்பற்றி சில வரிகள்.


தமிழ் இலக்கியங்களில் , வைணவத்திற்கென தனி இடம் பெற்றவை நாலாயிர திவ்வியப் பிரபந்தங்கள்.

அந்தந்தக்காலக்கட்டங்களில் வந்தவர்கள் மிகவும் பக்திப்பெருக்கோடு பல திருக்கோயில்களில் உறையும் மஹாவிஷ்ணுவைப்பற்றி , புகழ்ந்தும் , தனது நிலையையும் , பக்தியின் அவசியத்தையும் வலியுறுத்தி பாடல்களை இயற்றியுள்ளனர்.

பிற்காலத்தில் நாத முனிகள் என்பவரது பெரும் முயற்சியினால் இந்த நாலாயிரம் பாடல்கள் மீட்கப்பட்டன.

இதனை எழுதியவர்கள் ஆழ்வார்கள் என பிற்காலத்தில் அடையாளம் காணப்பட்டு அழைக்கப்பட்டனர்.





முதலாழ்வர்கள் நடுவில் வந்தவர்கள் , பிற்பாடு தோன்றியவர்கள் என வகைப்படுத்தப்பட்டனர்.

இதில் , திருமாலை என்பது நாலாயிர திவ்வியப் பிரபந்தங்கங்களில் ஒரு பகுதி.
யார் இதை இயற்றியது..ஏன் . எந்தக்காலத்தில் இயற்றினார் ? இதன் பொருள் என்ன இதுதான் என் மனதிலும் தோன்றின.
இதோ அதுவும். 


திருமாலை என்ற 45 பாடல்கள் இயற்றியவர் தொண்டரடிப்பொடியாழ்வார் என மற்றவர்களால் அழைக்கப்பட்ட விப்ர நாராயணன் என்ற சொந்தப்பெயர் கொண்டவர் . இவர் வாழ்க்கைக்குறிப்புகள் தந்திருக்கேன் . நினைவிருக்கலாம் , திருமால் பெருமை என்கிற திரைப்படத்திலும் பார்த்த நியாபகம் இருக்கலாம் . 
கும்பகோணத்தை அடுத்த திருமண்டகக்குடியில் பிறந்து , இயல்பிலேயே மஹாவிஷ்ணுவின் மீது பக்திக்கொண்டு அவருக்காக தினமும் பூப்பறித்து அதனை மாலையாக்கி அவருக்கு செலுத்தி வழிப்பட்டு வந்தவர் ,

அவரது வழியில் ஒரு தாசி(நடனமணி) குறுக்கிட , அவளை இவர் ஏறிட்டும் பார்க்காமல் இருக்க , அவளும் , இவரை பார்க்கவைக்க , இவரிடம் பழகி , தன் மேல் பைத்தியமாக்கிட முயற்சித்து வெற்றிப்பெறுகிறாள்.

விளைவு, பக்தியை விட்டு விப்ர நாராயணன் , அவள் மேல் மோகம் கொண்டு , அவள் நினைவாக அவளுடனே காமத்துடன் வாழ்கிறார்.

அரங்கனின் பொன் வட்டில்(பூஜைக்கு உபயோகிக்கும் பொருள்) காணாமல் போக , அதை இவர் தான் திருடியதாக சோழ மன்னரிடம் புகார் போக ,

இவர் அதை செய்ததாக இவரது சிஷ்யன் சாட்சி கூற , செய்யாதக்குற்றம் சாட்டப்பட்டு விடுதலை ஆகிறார்.

அரங்கன் தான் செய்த திருவிளையாடல் இது  என்று மன்னரது கனவில் வந்து உணர்த்தி , ஆழ்வாரை விடுவிக்க சொல்கிறார்.

பிறகு ஆழ்வார் தனது பக்தியை வெளிப்படுத்தி பாடல்கள் எழுதுகிறார் .
அதுவே இந்த திருமாலை .


இதில் முதல் (பாசுரங்கள் )14  பாடல்கள் , திருமாலின் பெயரை சொல்வதால் கிடைக்கும் பலன் , ஏன் சொல்ல வேண்டும் , ஏன் வேண்டும் பக்தி என்பவர் , அரங்கனிடம் , ஸ்ரீரங்கத்தில் உள்ள பெருமாளிடம் தமக்கு எப்படி பக்தி ஏற்பட்டது , அவர் தமக்கு எப்படி இறங்கினார் என்பதை , 

தன்னை விதியில்லா என்னைப்போல , மிகத் தாழ்ந்தவன் என்றுக் குறிப்பிட்டு , மற்ற எந்தத் தெய்வத்தையும் ஏறிடாமல் , பாடாமல் ஒரு பதி விரதைப்போல,  

அரங்கனைப் பாடிய வாயால் குரங்கனை(குரங்குகள் வாழும் மலையில் உள்ள திருவேங்கடமுடையான்) பாட மாட்டேன் என திருப்பதி பெருமாளையும் பாடாமல் , அச்சுவை பெரினும் வேண்டேன் என்று மோட்சத்தை யே வேண்டாம் என்கிறார் .

மற்ற ஆழ்வார்கள் பரமபத வாசம் கேட்கும் போது தனித்துப் பாடியவர் தொண்டரடிப்பொடியாழ்வார் , ஆம் இவர்  தொண்டருக்கும் தொண்டராக , அவரதுப்பாததுளிகளை கண்களில் ஒற்றிக்கொண்டு , அவர்களுக்கும் சேவை புரிந்தவர் .. !!

இனி அடுத்தடுத்தப் பாசுரம் படிக்கலாமா !!

No comments:

Post a Comment